Thursday 17 December 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 12 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-11 ற்கு லிங்க்
 
http://gowthamthamizhan.blogspot.in/2015/12/11.html
 
தொடர்-12


வாழ்வோடு பிணைந்த மணல்வெளி

இந்த மணல் பரப்பை தங்கள் உயிரென கருதுகிறார்கள் கொங்கராயகுறிச்சி கிராம மக்கள். தென்மாவட்ட சாதி மோதலின் தாக்கம் இங்கே இல்லை. கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் கருங்குளம் பெருமாள் கோயிலில் இருந்து மணல் பரப்புக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எடுத்து வரப்படுகிறார். அதிகாலையில் ஆற்றில் மீன் பிடித் திருவிழா நடக்கிறது. தவிர, தினசரி மக்கள் குடும்பத்தோடு கூடும் பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. இப்படி சுற்றுவட்டார பகுதி மக்களின் வாழ்க்கையோடும், வழிபாட்டு உணர்வுகளுடனும் ஆற்று மணல் பரப்பு பிணைந்திருக்கிறது.
இந்த மணல் பரப்பு மணல் மாபியாக்களின் கண்ணை உறுத்தியது. அதை வாரி எடுக்க திட்டமிட்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். கடந்த 15 ஆண்டுகளாக மணல் கொள்ளையை தடுக்க ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலியிலுள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை தலைமை செயலகம் என்று பல்வேறு மணலைக் காக்க இப்பகுதி மக்கள் ஏறாத இடங்கள் இல்லை.
போராட்டங்களுக்கான மொத்த செலவையும் கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும் பகிர்ந்து கொண்டன. சென்னையில் 20.9.2005 அன்று இவர்கள் நடத்திய சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்குப் பின்னர்தான் மணல் அள்ளும் பிரச்னை தீர்வை நோக்கி நகர்ந்தது


நீதிமன்றத்தால் கிடைத்த வெற்றி
 
நீதிமன்றத்திலும் தாமிபரணி மணல் கொள்ளை எதிரொலித்தது. தோழப்பன்பண்ணையில் ஆற்று மணல் குவாரி மூலம் அத்துமீறி மணல் அள்ளும் பிரச்சினையை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வாதிட்டார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. நீதிகேட்டு நடந்த போராட்டத்தில் அவர் வெற்றியும் பெற்றார். நீதிமன்ற உத்தரவின்படி, தாமிரபரணி முழுக்க ஆற்று மணலை அள்ளுவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தடை நீடிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் அடையாளமாகிப்போன தாமிரபரணி பாதுகாக்கப்பட்டுள்ளது.
மணல் அள்ளும் தடையை தொடர்ந்து நீட்டிப்பு செய்ய நீதிமன்றத்தை தொடர்ந்து நாடவும் கொங்கராயக்குறிச்சி மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆழ்வார்கற்குளம், கருங்குளம், சேரகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் தண்ணீர் பம்ப் செய்ய ஆற்றங்கரையில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உறைகிணறு அமைந்துள்ள பகுதியையொட்டி குறிப்பிட்ட தூரத்துக்கு மணல் அள்ள அனுமதிக்க கூடாது என்பது சட்டம்.
மணல் அள்ளும் பிரச்சினையின் நீட்சியாக இப்பகுதியில் இருவேறு நபர்கள் கொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.
மணல் அள்ளும் பிரச்னை வந்துவிடக்கூடாது, எந்த அசம்பாவிதங்களும் நிகழக்கூடாது என்று அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். மணல் அள்ளுவதை தடுத்து சாதித்துள்ள இம்மக்களின் பிரதிநிதியான கொங்கராயக்குறிச்சி ஊராட்சி தலைவர் எஸ்.ஜாகீர் உசேனி, ‘தி இந்துவிடம் கூறும்போது, “இந்தப் பகுதியில் 40 அடியில் சுத்தமான நிலத்தடி நீர் கிடைக்கிறது. காரணம், ஆற்றின் மணல்வெளி. இங்கே மணல் அள்ளினால் நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் செல்லும். பெரும் பள்ளங்களால் குளிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆற்றுமணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இனியும் மணல் அள்ள அனுமதி அளிக்கமாட்டோம்என்றார் உறுதியுடன். இந்த உறுதி நிச்சயம் நதியை காக்கும் என்றே நம்பலாம்.

தாமிரபரணி: மணல் திருட்டால் ஆற்றில் உருவான மரணப் பள்ளங்கள்

மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நதியின் வலி வேதனையானது. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் காணப்படும் பள்ளங்களால், இயற்கையான ஊற்று நீரின் அளவும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரத்தில் ஐந்தாண் டுகளுக்கு முன்பு 13 குவாரிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. ராட்சத இயந்திரங்களின் பேராசைக் கரங்கள் தாய் மடியைக் கிழித்தன. ஆயிரமாயிரம் லாரிகளில் தாய் மண்ணை பிற மாநிலங்களில் விற்றார்கள். இதனைத் தடுக்க நதியைப் போலவே திராணியற்று தவித்தார்கள் மக்கள்.
ஆற்று நீரோட்டம் மாறிப்போனது. மணல் அள்ளிய பள்ளங்களில் சீமை கருவேலம் வளர்ந்து மேடாகிப்போனது. மணல் மாஃபியாக்களின் போட்டியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மணல் கொள்ளை சமூதாய மோதல்களையும் உருவாக்கியது. நூற்றுக்கும் மேற் பட்டோர் இந்த மோதல்களில் உயிரிழந்தனர். காலம் காலமாக கவலை யின்றி குளித்த ஆற்றில் பெரும் செயற்கை பள்ளங்களும் அபாயச் நீர்ச் சுழல்களும் உருவாகின. இதில் சிக்கி சுமார் 30 பேர் இறந்தனர்.
 


ஐந்தாண்டுகளுக்குத் தடை
 
ஒருகட்டத்தில் தோழப்பன்பண்ணை பகுதியில் ஆற்றுமணல் அள்ள அனு மதிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு நீதிமன்றத்தில் ஆஜராகி, “ஆற்றில் மணலை அள்ளுவதற்கான நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் 54,417 யூனிட் மணல் மட்டுமே எடுக்க வேண்டும். ஆனால், 65,000 யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளதுஎன்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நீதிமன்றம், தாமிரபரணியில் மணல் அள்ள ஐந்தாண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தடை வரும் டிசம்பர் 2-ம் தேதியுடன் காலாவதியாகிறது. இப்போது மீண்டும் மணலை அள்ள திட்டமிட்டு வரு கிறார்கள் அதிகார பலமிக்கவர்கள். ஆனால், நீதிமன்றத்தை நாடி தடையை நீட்டிப்போம் என்கிறார்கள் மக்கள்.
 

1 comment: