Friday 27 November 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 2 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-1 ற்கு லிங்க்
 http://gowthamthamizhan.blogspot.in/2015/11/blog-post_27.html

தொடர்- 2 

யானை மணக்குது
இதற்கு மேல் வாகனம் செல்லாது. வனத்துக்குள் நடந்துதான் செல்ல முடியும். இறங்கி நடக்கத் தொடங்கினோம். வழியில் ஏராளமான சிற்றோடைகள், அருவிகள் சலசலக்கின்றன. ஆங்காங்கே சதுப்பு நிலக் காடுகள். சில இடங்களில் பகலும் இரவு போல காட்சியளித்தது வனம். சூரியக் கதிர்கள் உட்புகாத பசுமை மாறா சோலைக்காடுகள் அவை. இவை எல்லாம் தாமிரபரணியின் நீர் பிடிப்பு பகுதிகள். வழியில் வருகிறது யானைக்காடு. இங்கு யானைகள் அதிகம் வசிப்பதால் யானைக்காடு என்று அழைக்கிறார்கள். இங்கே தனியாக வீற்றிருக்கிறார் பிள்ளையார். இதனை தங்கைமச்சன் கோயில் என்கிறார்கள். பிள்ளையாரை வழிபட்டு சென்றால் யானைகள் தாக்காது என்பது மக்களின் நம்பிக்கை.

யானைக்காட்டில் உலா வரும் யானைக் கூட்டம்.
வனத்துக்குள் யானை உருவத்துக்கு பெரும் பாறைகள் நிறைந்திருக்கின்றன. ‘பாறைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம், அதன் பின்னால் யானைகள் மறைந்து நின்றிருக்கலாம்என்று எச்சரித்தார்கள் காவலர்கள். இங்கே மக்களின் பாதுகாப்புக்காக வனப் பாதையின் இரு பக்கத்திலும் யானைகள் கடக்காத வகையில் நீளமாக அகழிகளை வெட்டி வைத்திருக்கிறது கேரள வனத்துறை. அப்படி இருந்தும் இங்கே யானை தாக்கி இறந்துபோனவர்கள் உண்டு என்றார்கள்.
தொலைவில் யானைகளின் பிளிறலை கேட்க முடிந்தது. வழியெங்கும் யானை சாணம். அந்தப் பகுதியில் மட்டும் வனத்தில் வித்தியாசமான மணம் கமிழ்ந்தது. ‘யானை மணக்குதுஎன்று சிரித்தார் காவலர்.
இணை சேர தயாராகும்போது பெண் யானையிடம் இருந்து எழும் பிரத்யேக மணம் அது. இதனை உணர்ந்து ஆண் யானை, பெண் யானையுடன் இணை சேரும். இந்த மணம் எழாதபோது பெண் யானையின் விருப்பம் இல்லாதபோது ஒருபோதும் ஆண் யானை இணை சேராது. யானைக்கே உரிய குணம் அது.
காலடிச் சத்தம் கேட்டு புதர்களிலிருந்து தெறித்து ஓடுகின்றன புள்ளி மான்கள். மான் வகையில் இங்கு புள்ளி மான்கள், கடமான்கள், அரிய வகை சருகு மான்கள் வசிக்கின்றன. புலி, சிறுத்தை, அரிய வகை மரநாய்கள், நீர் நாய்கள், கரடிகள், ராஜ நாகங்கள், மலைப் பாம்புகள் இங்குள்ளன. தூரத்தில்ஹோஎன பேரிரைச்சல் கேட்டது. ‘போனோநீர்வீழ்ச்சி என்றார் காவலர். எல்லாம் தாமிரபரணிக்கான தண்ணீர்தான்.
இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணியின் நீர்பிடிப்புப் பகுதி. | படம்: கா.அபிசுவிக்னேசு
வழியில்லாத்திமோட்டாஎன் றொரு இடம் வருகிறது. இங்கே யானைகள் வந்தால் பாதுகாப்புக் காக ஓடி ஒளிய சிறு குடில் இருக்கிறது. அகழி தோண்டி அதில் மனிதன் நடக்கும் வகையில் சிறு மரப்பாலம் அமைத்து, மறுபக்கம் குடிலை கட்டியிருக்கிறார்கள். தொலைவில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தாலும் குடிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படவில்லை.
காட்டு வழியில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடந்தன. ஆண்டுக்கணக்கில் விழுந்து கிடந்த பிரம்மாண்டமான சில மரங்கள் பாறைகளைப் போல இறுகிக் கிடந்தன. சில இடங்களில் விழுந்த மரங்களே சிற்றாறுகளுக்கு பாலங்களாக அமைந்தன. உயரமான அத்தி மரங்களில் இருந்தும், நீர்மத்தி மரங்களில் இருந்தும் சிங்கவால் குரங்குகள் (Lion tailed macaque) கொத்துக் கொத்தாக கொழுந்து இலைகளையும் பூக்களையும் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தன. மந்திகள் பறித்துப் போடும் அந்த கொழுந்து இலைகளை மான்கள் விரும்பி சாப்பிடும். மந்திகளுக் கும் மான்களுக்குமான பந்தம் அது. அதேபோல புலிகள், சிறுத்தைகள் மான்களை வேட்டையாட பதுங்கினால் கடுமையாக குரல் எழுப்பி மான்களை உசுப்பிவிடும் இந்தக் குரங்குகள்.
பொதிகை மலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வசிக்கும் ஓரிட வாழ்விகளான சிங்கவால் குரங்கு, நீலகிரி கருமந்தி (Nilgiri langur), செந்தேவாங்கு (Slender loris), தமிழ கத்தின் மாநில விலங்கான வரையாடு (Nilgiri thar) ஆகியவை வசிக்கின்றன. இவைத் தவிர, பழுப்பு மரநாய் (Brown palm civet), பழுப்பு மர எலி (Malabar spiny dormouse), இலிங்கன் (Nilgiri marten) ஆகியவையும் இங்குள்ளன. இவை அனைத்துமே அழியும்தருவாயில் இருக்கும் அரிய வகை உயிரினங்கள்.
தவிர மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய 1,500 அரிய வகை தாவரங்களில் பொதிகையில் மட்டுமே 150 வகை தாவரங்கள் இருக்கின்றன. இவை மருத்துவப் பலன்கள் மிக்கவை. இந்தத் தாவரங்களை கையாள்வதில் பாரம்பரிய அறிவைப் பெற்றவர்கள்காணிகள்.
அழியும் பட்டியலில் இருக்கும் அரிய வகைஅமிர்தபலாதாவரம் (Decalepis arayalpathra) இங்கு விளைகிறது. இது முற்றிய வயிற்றுப் புண், புற்றுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மைக் கொண்டது.
ஒரு மணி நேரம் நடந்ததும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. கருமனை ஆறு. தொடர்ந்து வாலைபிந்தியாறு அருவியில் குளியலை முடித்துவிட்டு, நாலாறு என்ற சிற்றாற்றைக் கடந்து நடந்தோம். நாலாற்றைக் கடந்தவுடன் ஏராளமான பறவைகளின் கான கீதங்கள் மயக்கின. அரிய பறவையினமான மலபார் தீக் காக்கையை (Malabar trogon) பார்க்க முடிந்தது. அரிய வகை சாம்பல் மார்பு சிரிப்பான் (Grey breased laughing thrush) இங்கு காணக் கிடைத்தது ஆச்சர்யமே. நீட்டி, நிதானமாகவும், நல்ல சத்தமாகவும்ப்ப்பீ... கோகோ... ப்ப்பீ... கோகோ...’ என்று இவை கூவுவது ஏதோ குழந்தை கொஞ்சுவதுபோல இருக்கிறது. இந்தப் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித் ததும் தங்கள் கூடுகளை அழித்துவிடும். பச்சை நிறத்திலான சாம்பல் தலை சின்னானும் இங்குக் (Grey headed bulbul) காணக் கிடைத்தது.


பொதிகை மலை உச்சியில் அமைந்துள்ள அகத்தியர் சிலை.


இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணியின் நீர்பிடிப்புப் பகுதி. | படம்: கா.அபிசுவிக்னேசு


தாமிரபரணி நீர்பிடிப்புப்பகுதியான ஐந்தலை பொதிகை. | படம்கா.அபிசு விக்னேசு



                                                            - இன்னும் ஓடுவாள் 


 

1 comment:

  1. உங்கள் ப்ளாக் ல போட்டு இருந்த விஷயங்கள் வந்து ரொம்ப அருமையா இருந்தது. நான் உங்களோடு அந்தக் காட்டில பயணம் நடந்து வந்த மாதிரியே எனக்கும் அந்த உணர்வு. அகஸ்தியர் தரிசனமும் கொடுத்திட்டீங்க. மிக்க நன்றி.

    ReplyDelete